இலங்கைக்கு சீன அதிகாரிகள் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். 

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன அமைச்சர் பான் யூ, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

  குறிப்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார மற்றும் புத்தசாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட அதிகாரிகளுடன் சீன தரப்பு விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளனர்.

இதேவேளை, கண்டியில் தலதா மாளிகைக்கு செல்லவுள்ள சீன குழுவினர், யாழ்ப்பாணத்திற்கும் அமைச்சர் பான் யூ தலைமையிலான குழுவினர் செல்லவுள்ளனர். 

அண்மைக் காலமாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சீனாவின் ஆதரவு திட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்யும் சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழு, மூன்று தசாப்த கால உள்நாட்டு போருக்கு காரணமான தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *